புதுடில்லி: திருமணத்திற்கு பிறகு கணவனால் ஏற்படும் பாலியல் வல்லுணர்வு குறித்த வழக்கை உச்சநீதிமன்ற செயல் தலைமை நீதிபதி கீதா மிட்டல், சி.ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ரிட் அமைப்பு இணைந்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின்படி செக்ஷன் 375ல், திருமணமான பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணமான பெண்களை கட்டாய உடலுறவுக்கு அழைக்கும் கணவர்களின் குற்றத்திற்கு, தனியாக சட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்த ஆண்கள் நல அறக்கட்டளை அமைப்பினர், திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு போதுமான சட்டங்கள் உள்ளதாக தெரிவித்தனர். கணவனை பிரிந்து வாழும் மனைவியின் விருப்பம் இல்லாமல் பாலியல் தொல்லை கொடுப்பது, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் ஆகியவை உள்ளன என்று குறிப்பிட்டனர்.
இது குறித்து விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்கு பிறகு, கணவன் மனைவி இருவருக்கும் உடலுறவு கொள்ள விருப்பமில்லை என்று கூற உரிமை உள்ளது என்று தெரிவித்தனர்.
"திருமணம் நடந்த பிறகு, மனைவியின் ஒப்புதலையும் பெற்ற பின்பு தான் தம்பதியர் இருவரும் உடலுறவு கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தது.
திருமணத்திற்கு பிறகு, வீட்டு வேலைகளுக்கும், குழந்தைகள் நலனிற்கும் பணம் அளிக்காத கணவன், உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே குடும்பத்திற்கு பணம் கொடுப்பேன் என்று மனைவியை வற்புறுத்தினால் என்ன செய்வது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
எனினும், இந்த வழக்கு குறித்து தெளிவான தீர்பு எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, விசாரணையை ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.