This Article is From Mar 05, 2019

இறுதி செய்யப்பட்டது திமுக கூட்டணி… மீண்டும் ராஜ்யசபா எம்.பி ஆகிறாரா வைகோ..!?

கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டதால், இனி கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்று திமுக தலைமை தெரிவித்துவிட்டது.

Advertisement
தமிழ்நாடு Written by

தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் மதிமுக-வுக்கு, திமுக ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளது. இது குறித்த உடன்படிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். மதிமுக-வுடன் ஒப்பந்தம் போட்ட நிலையில், இனி திமுக, கூட்டணியில் யாரையும் சேர்த்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. மீதம் இருக்கும் 20 தொகுதிகளில் திமுக-வே போட்டியிடும் என்று தெரிகிறது. 

திமுக கூட்டணியில் முதன்முதலாக அதிகாரபூர்வமாக இணைந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிக்கு திமுக, 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது. அதற்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இறுதியாக மதிமுக-வுக்கு 1 மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ராஜ்யசபா சீட் மூலம் வைகோ, மீண்டும் மாநிலங்களவை எம்.பி-யாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இப்படி கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டதால், இனி கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்று திமுக தலைமை தெரிவித்துவிட்டது. எனவே தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. 

 

Advertisement

மேலும் படிக்க:  திமுக கூட்டணியில் சிபிஎம்… தொகுதி ஒதுக்கீடு உறுதியானது!
 

Advertisement