ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பரிவான 370 ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்டி, “இந்திய அரசு செய்வது மிக மோசமான பாவச் செயல்” என்று கூறியுள்ளார்.
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மெஹ்பூபா முப்டி, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மட்டுமல்லாது முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்படுள்ளனர்.
“இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான நாள் இன்று. 1947 செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2 தேசங்களுக்கான கொள்கை பொய்த்துவிட்டது. 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்கிற இந்திய அரசின் முடிவு சட்டத்துக்கு எதிரானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு முரணானது. இதன் மூலம் ஜம்மூ காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமிப்பு செய்யும்படி ஆகும்” என்று மெஹ்பூபா கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். காஷ்மீரில் இணைய சேவை மற்றும் போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. இது குறித்து மெஹ்பூபா, “இன்னும் எவ்வளவு மணி நேரத்துக்கு என்னால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு இந்தியாவையா நாம் எதிர்பார்த்தோம்” என்றுள்ளார்.