This Article is From Jul 13, 2018

‘எங்கள் கட்சியை உடைக்க நினைத்தால்...’: மெஹுபூபா பாஜக-வுக்கு எச்சரிக்கை

மெஹுபூபா முப்டி, ‘எங்கள் கட்சியை பாஜக உடைக்க நினைத்தால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • கடந்த மாதம் பாஜக-பிடிபி கூட்டணி முறிந்தது
  • அதையடுத்து, மெஹுபூபா முப்டி பதவியை ராஜினாமா செய்தார்
  • தற்போது ஜம்மூ-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது
New Delhi:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணியில் இருந்துவருமான மெஹுபூபா முப்டி, ‘எங்கள் கட்சியை பாஜக உடைக்க நினைத்தால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜக - பிடிபி இடையில் நிலவி வந்த கூட்டணி உறவு முறிந்தது. ‘ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புக் காரணங்களுக்கு மாநில அரசு சரி வர ஒத்துழைப்புத் தர மறுத்து வருகிறது. இனியும் எங்களால் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது’ என்று கூறி பாஜக, மெஹுபூபாவின் கட்சியுடனான கூட்டணியை முறித்தது. இதையடுத்து, மெஹுபூபா முப்டி அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக, பிடிபி-யுடன் கூட்டணியை முறித்துக் கொண்டாலும், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கொதிப்படைந்துள்ளார் மெஹுபூபா.

‘எங்களின் கட்சியை பாஜக உடைக்க நினைத்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். 1987 ஆம் ஆண்டைப் போல, காஷ்மீரிகளின் வாக்குரிமையை மத்திய அரசு பறித்தால், சலாவுதீன், யாசின் மாலிக் போன்ற கிளர்ச்சியாளர்கள் உருவாவர்கள்’ என்று பாஜக-வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பாஜக தரப்பு, ‘நாங்கள் பிடிபி-யின் எந்தத் தலைவர்களுடனும் பேசவில்லை. எங்கள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தக் கூடாது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவோ, ‘பிடிபி உடைந்தால் புதிதாக கிளர்ச்சியாளர்கள் உருவாவர்கள் என்று பாஜக-வை மெஹுபூபா மிரட்டுகிறார். ஆனால், அவரின் ஆட்சிக்குக் கீழ் தான் கிளர்ச்சியாளர்கள் அதிகமாக வளர்ந்தார்கள் என்பதை மறந்துவிட்டாரா என்ன? அப்படியே பிடிபி உடைந்தாலும், ஒரு கிளர்ச்சியாளர் கூட உருவாக மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று இந்த மொத்த விஷயம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

.