சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைகளுகிடையே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) ரத்து செய்துவதாக எழுந்த புகார்களுக்கு மத்தியில், மத்திய அரசு விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளது.
கோதுமையை பயிரிடும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்ததையடுத்து இந்த விலையுயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கோதுமை ஒரு குவிண்டாலுக்கு ரூ 50 உயர்த்தி, ரூ 1975 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடுகுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ .225ஐ உயர்த்தி, ரூ .4,650 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பயிறு ஒரு குண்டாலுக்கு ரூ .225 அதிகரித்து ரூ .5,100 எனவும், பருப்பு ரூ .300 அதிகரித்து ரூ .5,100 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் உணவு முறையை மாற்றுவது மற்றும் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு அடைய, இந்த பயிர்களுக்கு அரசாங்கம் ஒப்பீட்டளவில் அதிக எம்எஸ்பியை நிர்ணயித்துள்ளது" என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு வேறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.