This Article is From Dec 08, 2018

“என்னவானது ஜெயக்குமார் - சிந்து விவகாரம்..?”- ரகசியம் உடைக்கும் வெற்றிவேல்! #Exclusive

“ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா..?”, வெற்றிவேல் கேள்வி

“என்னவானது ஜெயக்குமார் - சிந்து விவகாரம்..?”- ரகசியம் உடைக்கும் வெற்றிவேல்! #Exclusive

அக்டோபர் மாத இறுதியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவின் ஆண் குரல், தன்னால் கர்ப்பமான ஒரு பெண் குறித்து பேசியது. அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயக்குமார் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

அதே நாளில், செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டியளித்த தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஜெயக்குமார்தான். அவருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது' என்று கூறி பகீர் கிளப்பினார்.

அந்தப் பேட்டியின் போது மேலும் அவர், ‘என்னிடம் ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேச மாட்டேன். இந்த ஆடியோ என்ன, இதுவல்லாமல் மேலும் 2 ஆடியோக்கள் என்னிடம் உள்ளன. அதையெல்லாம் வெளியிட்டால் அசிங்கமாகிவிடும். பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இப்படி வெளிப்படையாகப் பேசுகிறேன்.

ஒரு முக்கியமான விஷயம், இந்த விவகாரம் நேற்று நடந்ததில்லை. ஜெயக்குமார், பல நாட்களாகவே இந்தக் காரியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது பிரச்னை வெளி வந்திருக்கிறது. அம்மா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நாங்களெல்லாம் துக்கத்தில் துவண்டு கொண்டிருந்தோம். ஆனால், அவர் இப்படிப்பட்ட காரியத்தை செய்து வந்திருக்கிறார். அம்மா, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகக் கறாராக இருந்தவர். அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால், நடப்பதே வேறு' என்று கொதித்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயர் சிந்து என்பதும், சிந்துவின் தாயாரான சாந்திதான், போனில் பேசினார் என்றும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் வடசென்னை, ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தவர்கள் என்ற தகவலும் தெரிந்தது.

ஜெயக்குமார் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்த உடன், முதல் சில நாட்களுக்கு இருவரும் அணுக முடியாத வகையில் இருந்தனர். அந்நேரத்தில் தான் வழக்கறிஞர் கணேஷ் என்பவரும், வியாசார்பாடியில் சூப் கடை வைத்திருக்கும் சந்தோஷ்குமார் என்பவரும் சிந்து மற்றும் சாந்தி மீது பண மோசடி புகார்கள் கொடுத்தனர்.

பிரச்னையை சரிசெய்ய ஊடகங்களுக்கு இருவரும் பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். அப்படி சிந்து கொடுத்த ஒரு பேட்டியில், “அமைச்சர் தொடர்பான ஆதாரங்கள் நிறைய இருக்கு. அமைச்சரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் அவர் எங்களை அசிங்கப்படுத்த நினைக்கிறார். என் விவகாரத்தை திசைத் திருப்ப இப்படிப் பொய்யான புகார்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதோடு இந்த விளையாட்டை நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று மிரட்டினார்.

இந்த ஆடியோ லீக் விவகாரம் குறித்து கடந்த சில வாரங்களாக பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. அரசியல் வட்டாரத்தில் விசாரித்தால், ‘ஜெயக்குமாருக்கும் வெற்றிவேலுக்கும் டீலிங் நடந்துவிட்டது' என்றனர். இந்த தகவலுக்கு ஏற்றாற் போல் வெற்றிவேலும், கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் குறித்து எதுவும் பேசாமல் இருந்தார்.

குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம், “ஜெயக்குமார் ஆடியோ குறித்து பேசக் கூடாது என்றெல்லாம் எனக்கு எந்த நிர்பந்தமும் எனக்கில்லை. இந்த விவகாரத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஊடகங்களிலும் சரி, அரசியல் கட்சிகளும் சரி… யாருமே இதை பெரிதுபடுத்தாமல் கடந்து சென்றுவிட்டனர். நான் இப்போதும் அது குறித்து பேசத் தயார்” என்று ஓபனாக சேலஞ்ச செய்தார்.

வெற்றிவேல் தொடர்ந்து, “பாதிக்கப்பட்டப் பெண் சிந்து, ஆடியோ லீக் ஆவதற்கு 10 மாதத்துக்கு முன்னரே என்னிடம் வந்து, நடந்த பிரச்னைகளை எல்லாம் சொன்னார். அப்போதிலிருந்தே அவருக்கு முறையான தீர்வு வேண்டுமென நினைத்தேன். இது குறித்து பேச ஆளுநரிடம் கூட நான் அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன். கடைசி நேரத்தில் அந்தப் பெண் தரப்பில் வர மறுத்துவிட்டார்கள்.

இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும். ஊடகங்களிடம் பேசிவிட்டேன்… ஆளுநர் வரை இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல முயன்றேன்… ஆனாலும், பாதிக்கப்பட்டப் பெண் தரப்பில் சரியான அணுகுமுறை இல்லை. இதற்கு மேல் அவர்கள் தான் காவல் துறையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றவரிடம், தற்போது சிந்து எங்கு உள்ளார் என்று கேட்டோம்,

அதற்கு வெற்றிவேல், “சென்னையில் அவர்கள் இல்லை. பாண்டிக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். ஜெயக்குமாரைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு அச்சம். எங்கு தன் குழந்தையைக், ஜெயக்குமார் கொன்று விடுவாரோ அன்று அவர் பயப்படுகிறார். பலர் குடியை கெடுத்தவர் ஜெயக்குமார். என்ன வேண்டுமானாலும் செய்வார்” என்று ஆதங்கப்பட்டவர்,

“இந்த விவகாரம் தொடர்பாக நானே ஜெயக்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றே ஒரே நோக்கம் தான் எனக்கு உள்ளது. குழந்தைக்கு மரபணு சோதனை செய்தால் எல்லாம் முடிந்துவிடும்” என்றார் நிறைவாக.

“ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா..?”, வெற்றிவேல் கேள்வி

.