This Article is From Jan 21, 2019

“யாகம் வளர்த்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா”- கொதிக்கும் அதிமுக

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

“யாகம் வளர்த்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா”- கொதிக்கும் அதிமுக

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், நேற்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்துள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “யாகம் வளர்த்ததன் மூலம் ஒருவர் முதலமைச்சர் ஆகிவிட முடியுமா. ஊதுபத்தி கொளுத்தி புகை வந்தாலோ, கற்புரம் கொளுத்தி புகை வந்தாலோ அது யாகம் வளர்த்தல் ஆகுமா. எது செய்தாலும் இப்படி தேவையில்லாமல் முடிச்சு போடுவதுதான் பலரின் வேலை. நின்றால், உட்கார்ந்தால், நடந்தால், படுத்தால் கூட சிபிஐ விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்.

எதற்கெடுத்தாலும் ஸ்டாலின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்கிறார். கொடநாடு குற்றவாளிகளுக்குப் பின்னணியில் இருப்பது திமுகதான். அதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது. ஏன் அவர் தார்மீக பொறுப்பேற்று எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும் படிக்க :யாகம் நடந்ததா, இல்லையா..?- ஓபிஎஸ் மழுப்பல் பதில்

.