This Article is From May 14, 2019

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில்,

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியம் துளியுமின்றி சட்டவிரோதமாக கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துக்கொண்டதற்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

.