This Article is From Oct 24, 2018

‘சிபிஐ அமைப்பை கூண்டுக் கிளியாக வைத்திருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையா?’- மு.க.ஸ்டாலின் காட்டம்

சிபிஐ புலனாய்வு அமைப்புக்குள் அதன் இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே பனிப் போர் நிலவி வருகிறது

‘சிபிஐ அமைப்பை கூண்டுக் கிளியாக வைத்திருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையா?’- மு.க.ஸ்டாலின் காட்டம்

சிபிஐ புலனாய்வு அமைப்புக்குள் அதன் இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே பனிப் போர் நிலவி வருகிறது. இதனால் வெர்மா, அஸ்தானா மற்றும் பல சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதனிடையில் நாகேஷ்வர் ராவ், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. 

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஸ்டாலின், ‘நாகேஷ்வர் ராவ் குறித்து பல புகார்கள் சிபிஐ-யின் இயக்குநராக இருந்த அலோக் வெர்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து விசாரிக்க வெர்மா உத்தரவிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ-யில் ஏற்பட்டுள்ள சலசலப்பு பல சந்தேகங்களை எழுப்புகிறது.

ரஃபேல் ஊழல் விசாரணையை குழி தோண்டி புதைக்கவே இதைப் போன்ற ஒரு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதோ என்றும் கூட சந்தேகப்படத் தோன்றுகிறது. இது நமது நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தில் இருப்பதையே காட்டுகிறது. நாகேஷ்வர் ராவ் போன்ற சர்ச்சைக்குரிய ஒரு நபரை சிபிஐ இயக்குநராக நியமிப்பதன் மூலம், அந்த அமைப்பைக் கூண்டுக் கிளியாகவே வைத்திருக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது.

நாகேஷ்வர் ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். குட்கா ஊழலுக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சிபிஐ விசாரித்து வரும் இந்நேரத்தில் சிபிஐ இயக்குநராக இருந்த வெர்மாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது' என்று கவலை தெரிவித்துள்ளார். 

.