This Article is From Sep 25, 2019

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சத்தியநாராயணா மற்றும் சேசசாயி அவர்கள் முன்பு வந்த போது, “எப்.ஐ.ஆரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அதிமுக அரசு கூறியிருக்கிறது

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்களுக்கு, தலா 4000 ரூபாய் வீதம், 89.5 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டிலிருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அ.தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த இடைத்தேர்தலின் போது, மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., இந்த முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) ரத்தானது குறித்து இதுவரை மேல்முறையீடு செய்யாமல் இருப்பதும், அதை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், இந்தியத் தேர்தல் ஆணையமும் கை கோர்த்து ஏதோ உள் நோக்கத்துடன் வேடிக்கை பார்ப்பதும் “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சத்தியநாராயணா மற்றும் சேசசாயி அவர்கள் முன்பு வந்த போது, “எப்.ஐ.ஆரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அதிமுக அரசு கூறியிருக்கிறது. “அந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது அல்ல” என்று அரசு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரமும் அதிகாரமும் இருந்தும், மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனின் சட்ட விரோதச் செயலைக் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்கள் ஆகியோர் மீது அடுத்தடுத்து பல வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தி, பிறகு அந்த வழக்குகளை எல்லாம் இப்படி நீர்த்துப் போக வைக்கவும், அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஆகவே, 89 கோடி ரூபாய் ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி, பெயர்களே இல்லாமல் எஃப்.ஐ.ஆர். போட்ட போலிஸ் அதிகாரி, உயர்நீதிமன்ற உத்தரவின்கீழ் முறையாக இந்த வழக்கினைக் கண்காணிக்காத அப்போதைய இணை போலிஸ் கமிஷனர்,

இதுவரை தனி நீதிபதியின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாத மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகிய அனைவர் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையமே தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரே உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், இந்திய வாக்காளர்கள், தேர்தல் நடைமுறைகளின் மீதும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதும் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுப் போய்விடும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார். 

.