This Article is From May 28, 2019

மோடி தான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார்: ரஜினிகாந்த் புகழாரம்!

மக்களவை தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றி, மோடி என்கிற ஒரு தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி, மக்களை ஈர்க்கும் தலைவருக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மோடி தான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார்: ரஜினிகாந்த் புகழாரம்!

இதுகுறித்து சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

மக்களவை தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றி, மோடி என்கிற ஒரு தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி, மக்களை ஈர்க்கும் தலைவர் அவருக்கு கிடைத்த வெற்றி, இந்தியாவை பொறுத்தவரை மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, ஒரு தலைவனை வைத்து தான் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.

இந்தியாவில், நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு மோடி தான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார். அதேபோல், தமிழகத்திலும் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அதை பார்க்கும் போது மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி.

காவேரி - கோதாவரி ந்திகள் இணைப்பே முதல் திட்டம் என நிதின் கட்கரி அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வியுற்ற போதும், அவர் இவ்வாறு அறிவித்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை விட்டுவிட்டு மோடிக்கு ஆதரவான அலை வீசியுள்ளது. மோடிக்கு எதிரான அலை தமிழத்தில் இருந்துள்ளது. அரசியலில் எதிர் அலைக்கு எதிராக யாரும் ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பான், ஸ்டெர்லைட், நீட், எதிர்கட்சிகள் செய்த சூறாவளி பிரசாரம் போன்றவை மோடி எதிர்ப்பு அலைக்கு காரணமாக இருந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 16 மாதங்கள் முன்னதாக கட்சி ஆரம்பித்த நிலையில், கிட்டதட்ட 4 சதவீதம், கணிசமான வாக்குகள் வாங்கியுள்ள கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள்.

தலைவர் தகுதியை ராகுல் இழந்துள்ளார் என்று நான் கூறமாட்டேன். ஒரு இளைஞராக கட்சியை நிர்வகிப்பது என்பது மிகுந்த சவாலானது, மூத்த தலைவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் நிச்சியம் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது.

ஆளும் கட்சியை போல எதிர்க்கட்சியும் முக்கியம் என்பதால், அவர் பலமான எதிர்கட்சியாக இருக்க வேண்டும். மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளேன் என்று அவர் கூறினார்.

.