திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவரது சொந்த ஊரான சிவகங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். சிவகங்கைக்கு சென்ற கடிதம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் ப.சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் திகார் சிறையில் அவரை அடைத்துள்ளனர்.
சிறையில் இருந்தபோதும், அவர் தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியிருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிதம்பரத்திற்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி, அதனை அவரது சொந்த ஊரான சிவகங்கைக்கு அனுப்பியிருக்கிறார்.
அங்கு சிதம்பரம் இல்லாததால் மோடி அனுப்பிய வாழ்த்து மடல், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவுடன், ' உங்களது (மோடியின்) பிறந்தநாள் வாழ்த்து கடிதம் எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்துள்ளது. நீங்கள் வாழ்த்தியதைப் போன்று மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.
துரதிருஷ்டவசமாக உங்களது விசாணை அமைப்புகள் என்னை அந்தப் பணியை செய்ய விடாமல் தடுத்திருக்கின்றன. என் மீதான துன்புறுத்தல்கள் முடிவுக்கு வந்ததும், நான் மீண்டும் உங்களைப் போன்று மக்கள் பணியாற்ற வந்து விடுவேன்' என்று மோடிக்கு பதில் அளித்துள்ளார். சிதம்பரத்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.