தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தொற்று பரவலுக்கு முக்கியக் காரணமாக தப்லீக் ஜமாத் மாநாடு கருதப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த இஸ்லாமிய மாநாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்தும் பெரும்பாலோனோர் பங்கெடுத்துக்கொண்டது தொற்று பரவலுக்கு மிக முக்கியக் காரணமாக கருதப்பட்டது.
இந்த நிலையில் இதன் தலைவரான மௌலானா சாத் மீது பண மோசடி வழக்கினை அமலாக்க இயக்குநரகம் பதிந்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக் ஜமாத் கூட்டத்தினை கூட்டியதற்காகக் காவல் துறையினர் இவர் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் மௌலானா சாத் மீது, அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத் மற்றும் அதன் நிர்வாக நிதி மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து நிறுவனம் விசாரித்து வருவதாகவும், வங்கிகள் மற்றும் நிதி புலனாய்வு தகவல் சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிலிருந்து பண பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கினை விசாரிப்பதற்கு, தற்போது அமலாக்கத்துறை மெளாலானா சாத்க்கு விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மௌலானா சுய தனிமைப்படுத்தலில் இருப்பதால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை அமலாக்கத்துறை கேட்டு வருகிறது. சுய தனிமைப்படுத்தல் முடியும் தறுவாயில் அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படலாம்.
கொரோனா தொற்றினை தடுக்க டெல்லி அரசு கூட்டம் கூடுவதை சட்ட விரோதம் என்று அறிவித்திருந்தது. ஆனால், சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்த நிகழ்வில் பங்கேற்க பல வெளிநாட்டினர் வந்திருந்தனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக கூட்டத்தினை கூட்டியதற்காக ஜமாத் தலைவரான மௌலானா மீது டெல்லி காவல்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த கூட்டம் கூட்டியதன் விளைவாகத் தொற்று பரவல் பெருமளவில் ஏற்பட்டது. .இந்த நிலையில் தற்போது மௌலானா மீது சட்டப் பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாயின் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
தப்லீக் ஜமாத் குழுவின் செய்தித் தொடர்பாளர் முஜீப்-உர் ரஹ்மான் புதிய குற்றச்சாட்டுகள் குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
80க்கும் அதிகமான நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்ட சன்னி இஸ்லாமியக் குழுவினர் தப்லீக் ஜமாத்தில் உள்ளனர். கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த நிகழ்வில் 9,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கு இதில் பங்கேற்றவர்கள் பயணித்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் 3000 நபர்கள் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஜமாத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி நாட்டில் 400க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.