உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுக்கப்பட்டார் ரூபி பியூட்டி
Chennai: ‘உடல் பருமனாக இருக்கிறாய்’ என்று கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ரூபி பியூட்டி, இன்று பாடி பில்டிங் சாம்பியனாக உருவெடுத்துள்ளார். 6 வயது குழந்தையின் தாயான ரூபி, அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
தனது அசாத்திய பயணம் குறித்து பேசிய ரூபி, ‘எனது உடல் பருமனால், என் கணவருக்கு என் மீது பற்றில்லாமல் ஆனது. அப்போது தான் எனது நிலை குறித்து நான் உணர்ந்தேன். உடற்பயிற்சி நோக்கி அந்த சமயத்தில் தான் என் கவனத்தைத் திருப்பினேன்’ என்றவர் தொடர்ந்து,
‘முதலில் நான் நன்கு நடக்க ஆரம்பித்தேன். அதனால் எடை குறைந்தது. குழந்தை பெற்ற பிறகு எடை குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தொடர்ந்து என் இலக்கின் மீது தீவிரமாக இருந்தேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்’ என்கிறார் உறுதியாக.
உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கியபோது நிதி சார்ந்த சில சிக்கல்களை சந்தித்ததாகவும், ஜூம்பா பயிற்சியாளராக மாறிய போது அந்த சிக்கலை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது என்றும் கூறுகிறார் ரூபி. இந்நிலையில் அவர், ‘மிஸ்.சென்னை பட்டத்தை வென்றுள்ளேன். அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வென்றுள்ளேன். எனக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும். நான் என்னைப் பற்றி நிரூபித்துவிட்டேன். பெண்களும் இதைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். இந்தத் துறையில் நம் மாநிலத்தில் இருந்து பெண்களே இல்லை’ என்றார் முடிவாக.
ரூபி குறித்து அவரது பயிற்சியாளர் கார்த்திக், ‘நான் பல பெண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு சில மாதங்களில் ஆர்வம் இழந்துவிடுவார்கள். ஆனால் ரூபிக்கு அசாத்திய மன வலிமை இருக்கிறது. நான் ஒரு ஆண்டுக்கு இலக்கு வைத்தால், அதை 6 மாதங்களில் செய்து முடிப்பார் ரூபி. மிஸ்.இந்தியா பட்டத்தை ரூபி சுலபமாக வென்றுவிடுவார்’ என்று பெருமையுடன் கூறுகிறார்.