மும்பையில் பருவமழை தொடங்கிய நிலையில், நகரின் முக்கிய பகுதிகளில் இன்று காலை முதல் விடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி கூறும்போது, கடந்த ஐந்து மணி நேரத்தில் சராசரியாக 43.23 மி.மீ, கிழக்கு புறநகரில் 64.14 மி.மீ மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 78.21 மி.மீ பதிவாகியுள்ளது. "கடந்த சில மணி நேரங்களில் நகரத்தில் மிதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதுவரை பேரிடர் மேலாண்மை மையம், கலத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். தற்போது, நகரத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது, காற்றில் ஈரப்பதம் 88 சதவீதமாக உள்ளது.
மும்பை மழையின் படங்களையும், வீடியோக்களையும் மக்கள் சமூக ஊடகங்களில், மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மும்பை சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், உள்ளூர் ரயில் மற்றும் விமான சேவைகள் தொடர்ந்து சீராக இயங்குகின்றன. "காலை 9 மணியளவில் ஒரே ஒரு விமானம் மட்டும் வழிமாற்றி அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே, ரத்னகிரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.
மும்பை சாண்டா குரூஸ் மற்றும் தானே பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அடுத்த 4 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்றும் மும்பையில் மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.