This Article is From Feb 06, 2019

தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு உரிமை உள்ளது - ஓ.பி.எஸ் விளக்கம்

எனது மகன் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு உரிமை உள்ளது - ஓ.பி.எஸ் விளக்கம்

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையின் அடிப்படையிலேயே, எனது மகன் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக போட்டியிடுபவர்கள் இன்று முதல் தேர்தலில் போட்டியிட விருப்பமுடையவர்கள் கடந்த 4ஆம் தேதி, முதல் அவர்களது விருப்ப மனுவை சமர்ப்பித்து வரலாம் என்று கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. தேனி தொகுதியில் போட்டியிட ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தும், சேலத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனும் விருப்ப மனு பெற்றுள்ளனர்.

இதனிடையே, ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விரும்புவது குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்திவிட்டு இப்போது தன் மகனை தேர்தலில் போட்டியிட வைப்பது என்ன நியாயம்? ஊருக்கு ஒரு நியாயம்? ஓபிஎஸ்சுக்கு ஒரு நியாயமா? என தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க உரிமை உள்ளது. என் மகனுக்கும் தேர்தலில் நிற்க எல்லாத் தகுதியும் இருக்கிறது. ஒருவர் அரசியலில் நீடிப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்றார்.
 

.