தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜூன் 22-ம் தேதி விசாரித்தார்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென சங்கரதாஸ் சுவாமிகள் அணியின் பொது செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேசும், அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகியுள்ளனர்.
இதுதொடர்பாக இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டு இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் ஆதரவற்ற குழந்தைகள்,திருநங்கைகளின் நலனுக்காக ரூ.10 லட்சத்தை தருவதாக ஐசரி கணேஷ் உத்தரவாதம் அளித்து தனது தவறுக்காக ரூ.10 லட்சத்தை அபராதமாக செலுத்துகிறேன் என நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.