புதுச்சேரிக்கு உதவிய நடிகர் விஜய்யின் தாராள மனதை வரவேற்கிறேன் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
அந்தவகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்), பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி என மொத்தம் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா நிவாரணத்துக்காக திரைத்துறையில் இருந்து முதலாவதாக புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதற்கு முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், முதலாவதாக நடிகர் விஜய் ரூ.5 லட்சத்தை புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை புதுச்சேரியில் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "கொரோனாவை கட்டுப்படுத்த சாதனங்கள் வாங்க நிதி தேவைப்பட்டதால் உதவ கோரினேன். பலரும் தாமாக முன்வந்து உதவுகின்றனர். புதுச்சேரியில் நிறைய திரைப்பட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வருகிறார்கள். அவர்களுக்கும் புதுச்சேரிக்கு உதவ கடமை, பொறுப்பு உண்டு.
நடிகர் விஜய் ரூ.5 லட்சம் உதவுவதற்கு நன்றி. தாராள மனதை வரவேற்கிறேன். நன்றி. அதேபோல் இதர நடிகர்களும், திரைத்துறையினரும் உதவும் வகையில் தாராளமாக முன்வந்து நிதி தர வேண்டும்" என்று கோரினார்.