தமிழகத்தின் கோவை மற்றும் நாகையில் தேசிய புலனாய்வு அமைப்பான NIA அதிகாரிகள் அதிரடி ஆய்வை நடத்தினர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருப்பதாகவும், அவர்கள் இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் தமிழகத்தின் கோவை மற்றும் நாகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. மட்ட அளவிலான அதிகாரியின் தலைமையின் கீழ் 10 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையேவும் தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவையில் மொத்தம் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தீவிரவாத செயலுக்கு திட்டம் தீட்டியது, தாக்குதலுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவது போன்றவை கோவையில் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர சிலர் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி.எம்.நகரில் நிசார் என்பவரது வீடு, லாரிப்பேட்டையில் சாரிதின் என்பவது வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ. சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த செப்டம்பர் 21-ம்தேதி நெல்லை மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 29-ம்தேதி கோவையின் சில இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிரவாதிகள் இருப்பதாக வந்த எச்சரிக்கையின்பேரில் சோதனை செய்யப்பட்டது.