சென்ற மாதம் மகாராஷ்டிர அரசியல் குழப்பத்துக்கு விதை போட்டவரான தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
வரும் டிசம்பர் 30 ஆம் தேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் உறவினரான அஜித் பவார், மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று பாஜகவுடன் கைகோர்த்தார் அஜித் பவார். அடுத்த நாளிலேயே பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க, அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டது. அதிக அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து வருவதாக சொன்ன அஜித் பவாரால், அதை சாதித்துக் காட்ட முடியவில்லை. இதனால், ஃபட்னாவிஸும் பவாரும் அடுத்தடுத்துப் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
மீண்டும் சரத் பவாரின் முகாமுக்கே வந்தார் அஜித். அதைத் தொடர்ந்து சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி தலைமையில் கூட்டணி அரசு, மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது.