இதழியல் துறையில், “குரலற்றவர்களின் குரலாக விளங்கியதால்” மிகவும் புகழ்பெற்ற மகசேசே விருதை வென்றுள்ளார் NDTV-யின் ரவிஷ் குமார். 2019 ஆம் ஆண்டிற்கான மகசேசே விருது வாங்கும் 5 பேரில் ரவிஷ் குமாரும் ஒருவர் ஆவார். மகசேசே விருது ஆசிய நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
இதழியல் பணிக்காக ரவிஷ் குமாருக்கு மகசேசே விருது வழங்கப்படுவதையொட்டி, அவர் குறித்து, “மிகவும் தொழில் ரீதியான இதழியலை, சமச்சீராகவும், அதே நேரத்தில் வேகமாகவும் வழங்குவதில் ரவீஷ் குமார் முன்னணியில் இருக்கிறார். மக்களின் குரலாக நீங்கள் மாறும்போது இதழியலாளராக மாறுகிறீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரைச் சேர்ந்த கோ சுவே வின், தாய்லாந்தைச் சேர்ந்த அங்கனா நீலாபைஜித், பிலிப்பைன்ஸின் ராய்முண்டோ பஜின்டே, தென் கொரியாவின் கிம் ஜோங்-கி ஆகியோரும் இந்த ஆண்டு மகசேசே விருதை வென்றுள்ளனர்.
ரவிஷ் குமார், NDTV-யில் ‘ப்ரைம் டைம்' என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரின் நிகழ்ச்சி குறித்தும் மகசேசே விருது கொடுக்கும் அமைப்பு பேசியுள்ளது.
“மிகவும் குறைவான வெளிச்சம் பெற்ற பிரச்னைகள் குறித்தும், உண்மை வாழ்க்கை குறித்தும் எளிய மக்களின் நிலை குறித்தும் அவரது நிகழ்ச்சி பேசுகிறது. மக்கள் சார்ந்த இதழியல் பணியை அவர் முன்னெடுக்கிறார். தனது செய்தி அறையை ரவிஷ், ‘மக்களின் செய்தி அறை' என்கிறார். உண்மை தரவுகளையும் கட்டுப்பாட்டுடனுமான தொழில் முறை இதழியல் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்” என்று மகசேசே விருது அமைப்பு தெரிவித்துள்ளது.
பிகாரின் ஜித்வார்பூரில் வளர்ந்த ரவிஷ் குமார், 1996 ஆம் ஆண்டு முதல் NDTV-யில் பணிபுரிந்து வருகிறார். தனது அச்சமற்ற தன்மைக்காகவும், உண்மையை வெளிப்படையாக பேசும் குணத்துக்காகவும் பல முறை மிரட்டல்களுக்கு உள்ளாகியவர் ரவிஷ். டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தார் ரவிஷ்.
ஆர்.கே. லக்ஷ்மண், பி.சாய்நாத், அருண் ஷோரி, கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதற்கு முன்னர் மகசேசே விருதை வென்றவர்கள் ஆவர். “மகசேசே விருதை வென்றவர்களின் க்ளபுக்கு உங்களை வரவேற்கிறேன் ரவிஷ். மிகவும் இக்கட்டான காலத்தில் உங்களுடைய இதழியல் பணி தொடர்ந்து சிறக்கும் என நம்புகிறேன்” என்று ரவிஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.