This Article is From Jun 08, 2019

“கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை..!”- எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அதிமுக எம்எல்ஏ

"நான் சொல்லும் கருத்து கட்சியின் உட்பூசல் குறித்தது அல்ல. கட்சியில் தற்போது பல நெருடல்கள் இருக்கின்றன"

“கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை..!”- எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அதிமுக எம்எல்ஏ

"கட்சியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்ல வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும்"

இன்று திடீர் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா. அவர் செய்தியாளர் சந்திப்பின்போது, “அதிமுக கட்சிக்கு வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும்” என்று பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

அவர் மேலும், “அதிமுக-வுக்கு வலிமையான தலைமை தேவை. இப்போது அப்படிப்பட்ட தலைமை இல்லை. இரட்டைத் தலைமையால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமையை ஏற்க வேண்டும். நான் சொல்லும் கருத்து கட்சியின் உட்பூசல் குறித்தது அல்ல. கட்சியில் தற்போது பல நெருடல்கள் இருக்கின்றன. எனவே கட்சியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்ல வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும். 

அதே நேரத்தில் தினகரன் என்கின்ற மாயை இப்போது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒரு காலத்திலும் மாற்று இயக்கத்துக்கோ கட்சிக்கோ ஆதரவாக செயல்படமாட்டார்கள். அதிமுக-வை எதிர்த்து திமுக ஒருநாளும் வெற்றி பெறாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 1 எம்.பி., ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தவில்லை. யார் இதன் பின்னர் உள்ளார்கள்” என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து பனிப் போர் நடந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரே இப்படிப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளது அக்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

.