This Article is From Jul 12, 2018

நித்திஷ் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்: எதிர்க்கட்சிகளை வெறுப்பேற்றிய அமித் ஷா

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் பாஜக தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்

நித்திஷ் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்: எதிர்க்கட்சிகளை வெறுப்பேற்றிய அமித் ஷா
Patna:

பாட்னா : நித்திஷ் எங்கள் கூட்டணியில் தான் இன்னமும் தொடர்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் இணைந்தே சந்திப்போம். எங்களுக்குள் மோதல் வரும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் பாஜக தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தமிழகப் பயணம் மேற்கொண்ட அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.

இதனையடுத்து, இன்று பீகார் சென்ற அமித் ஷா, பாட்னாவில் உள்ள விருந்தினர் மாளிகையில் காலை உணவின் போது, மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நித்திஷ் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பாஜக தொண்டர்கள் கூறுகையில், பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் களையவே அமித் ஷா இந்த சந்திப்பை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர் நித்திஷை சமாதானப்படுத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காலையில் நடந்த சந்திப்பை அடுத்து மீண்டும் இன்று இரவு உணவின்போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமித்ஷா தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் நித்திஷ் எங்கள் கூட்டணியில் சேரமாட்டார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கணிப்பு தவறானது. வரக்கூடிய தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கூட்டணியில் இருந்து வெளியேறிய நித்திஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு யாதவ் மற்றும் காங்கிரஸை சந்தித்தது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான சந்திப்பாகவே எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், இதை மறுத்த நித்திஷ் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது.

.