இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி (Hindi) இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் அமித்ஷாவின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தனது முகநூலில் பதிவில் கூறியதாவது,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை, நாடு முழுவதும் எதிர்ப்பு இருக்கும் போதிலும், மொழியின் பெயரில் ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குவதற்கான சங்க பரிவாரின் அறிகுறிகளாக இதனை பார்க்க வேண்டும். இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. தெற்கு மற்றும் வடகிழக்கு மக்கள் இந்தி பேசமாட்டார்கள் என்று பினராயி விஜயன் மலையாளத்தில் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை சுமத்துவதற்கான நடவடிக்கை அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமமாகும். மத்திய அமைச்சரின் இந்த கருத்து, இந்தி பேசாத மற்ற மொழி பேசும் மக்களின் தாய்மொழிகளுக்கு எதிரான போர்க்குரல் என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியை அவர்களின் முதன்மை மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகள் அவர்களின் தாய்மொழியை மறுக்கும் முயற்சியாகும்'... இந்தி புரியாத காரணத்தினால் தான் இங்கு சேர்ந்தவர்கள் இல்லை என்று எந்த இந்தியரும் உணரக்கூடாது. இந்தியா பல்வேறு மொழிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு தேசிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் சங்க பரிவார் பின்வாங்க வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை மாற்ற பயன்படும் இத்தகைய நகர்வுகளை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும், ”என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த இந்தி குறித்த கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா தமது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,‘வேற்றுமையில் ஒற்றுமை'என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது. இது, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது. என்று கடுமையாக சாடினார்.
அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்திற்கு எதிராக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெற்கில் இருப்பவர்கள் பலரும் இந்தியை இரண்டாவது மொழியாக கற்று வருகின்றனர். ஆனால், வடக்கில் இருப்பவர்கள் யாரும் மலையாளத்தையும், தமிழையும் கற்றுக்கொள்வதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.