சிங்கம்-3 திரைப்படத்தில் நடித்துள்ள நைஜீரிய பிரபலம், டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காலைத்தை தாண்டி நீண்ட நாட்கள் தங்கியதற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் இன்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவரை கைது செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் முகமது அகான்பி ஒஜரா என்ற ஓலா ஜேசன். இவர், பாலிவுட்டில் தங்கல், கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில், சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 படத்திலும் வில்லன்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நீண்ட நேரம் சுற்றிக்கொண்டிருந்த அவரிடம் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட் இருந்துள்ளது. தொடர்ந்து, பாஸ்போர்ட்டை பார்த்த போது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரிய வந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியிருந்துள்ளார்.
இதுபற்றி விசாரித்தபோது முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அவர், உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.