This Article is From Nov 25, 2019

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அஜித் பவார் மீதான 9 ஊழல் வழக்குகள் ரத்து!!

கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அஜித்பவார் மீதான நீர்ப்பாசனத்துறை ஊழலை பாஜக பூதாகரப்படுத்தியது. முதல்வராக அப்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் பொறுப்புக்கு வந்ததும், நீர்ப்பாசனத்துறை ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டார்.

தற்போது அஜித் பவார் தனக்கு 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் உதவியோடு, பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் அஜித் பவார் மீதான 9 ஊழல் வழக்குகளில் அவருக்கு தொடர்பில்லை என்று கூறி, ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் ஊழல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், அஜித் பவாரை தொடர்பு படுத்தி தொடரப்பட்ட 9 நீர்ப்பாசனத்துறை முறைகேடு வழக்குகளில் அவருக்கு தொடர்பில்லை என தெரிய வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 3 ஆயிரம் ஒப்பந்ததார ர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சிக்கு வர உதவி செய்து 3 நாட்களில் இப்படியொரு தகவல் வெளிவந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அஜித்பவார் மீதான நீர்ப்பாசனத்துறை ஊழலை பாஜக பூதாகரப்படுத்தியது. முதல்வராக அப்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் பொறுப்புக்கு வந்ததும், நீர்ப்பாசனத்துறை ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டார்.

முன்பு மாநிலத்தில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோதும், நீர்ப்பாசனம் தொடர்பாக ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. வாஷிம், யவத்மால், அமராவதி, புல்தனா, விதர்பா ஆகிய பகுதிகளில் இந்த முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அஜித் பவார் மீது, கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

தற்போது அஜித் பவார் தனக்கு 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார்.

.