ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டி மகாராஷ்டிராவில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 17 வயதுச் சிறுவனும் அடங்குவார். அம்மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் குடியரசு தினம் வரவுள்ள நிலையில், ஸ்லீப்பர் செல்கள் குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்துள்ளனர். இதையடுத்து அம்மாநிலத்தின் மும்ப்ரா, தானே மற்றும் அவுரங்காபாத் ஆகியப் பகுதிகளில் இருந்து 9 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வந்த நம்பத்தகுந்த வட்டார தகவலை வைத்து இந்த விவகாரம் குறித்து கடந்த சில வாரங்களாக புலனாய்வு நடத்தப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து 12-க்கும் மேற்பட்ட சிறிய குழுக்களை போலீஸார் உருவாக்கி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ரசாயனப் பொருட்கள், வெடிமருந்து, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், அமில பாட்டில், கத்திகள் மற்றும் ஹார்டு டிரைவ் போன்ற பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.