நிர்பயா வழக்கில் திடீர் திருப்பமாகக் குற்றவாளிகள் தங்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வரும் வெள்ளியன்று மரண தண்டனை அவர்களுக்கு நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அதனை நிறுத்தி வைக்கும் முயற்சியாக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகள் 4 பேரில் அக்சய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நான்காவது குற்றவாளியான முகேஷ் சிங்கின் கருணை மனு, மறு சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவருக்குச் சட்ட உரிமைகள் இன்னும் ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும் வரும் வெள்ளியன்று காலை 5.30-க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை.
இதன் தொடர்ச்சியாகக் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ரானா குற்றவாளிகள் மார்ச் 20-ம்தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவித்தார். அனைத்து விதமான சட்ட உரிமைகளையும் பயன்படுத்தி விட்டோம் என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்து விட்டார்.
இதனால் குற்றவாளிகளான அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் எதிர்வரும் வெள்ளியன்று தூக்கிலிடப்படவுள்ளனர்.
இந்த வழக்கில் சிறுவன் ஒருவன் குற்றவாளி. அவன் சீர் திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனது 3 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றுவிட்ட நிலையில், அவன் யார் என்பது குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் பாலியல் பலாத்கார கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மத்திய அரசு, குல்பூஷனின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தற்போது நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.