நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்ஷய் சிங்கின் தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு கொடுத்த தீர்ப்பை சீராய்வு செய்ய அவசியம் உள்ளதாக தோன்றவில்லை என்றும் மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவியான 23 வயது நிர்பயா கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த இந்த சம்பவத்தின்போது நிர்பயா கடுமையாக தாக்கப்பட்டு பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றின உயிரிழந்தார்.
மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.
இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய்குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அக்சய் குமார் சிங் சீராய்வு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அக்ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், கொலை குற்றவாளியான அக்ஷய் குமாரின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது.