நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை இல்லையென்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பவன் குப்தாவின் கருணை மனு தொடர்பாக, குடியரசுத் தலைவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதனைக் காரணம் காட்டி, நீதிமன்றம் தூக்குத் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா கருணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்டுள்ள உள்துறை அமைச்சகம் அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
தெற்கு டெல்லியில் 2012 டிசம்பர் 6-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா (அச்சமற்றவள்) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பல்வேறுகட்ட சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 29-ம்தேதி அவரது உயிர் பிரிந்தது.
இந்த சம்பவத்தில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் சிறுவன் ஒருவன் என 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் முகேஷ், வினய், அக்சயின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொள்ளக் குற்றவாளியான சிறுவன் தனது தண்டனைக் காலத்தைச் சீர்திருத்தப் பள்ளியில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டான்.
இந்த நிலையில் கடைசி வாய்ப்பாக மீதம் இருக்கும் பவன் குப்தா தற்போது குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியுள்ளார். இந்த மனு நிலுவையில் இருப்பதால் குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.