Nirbhaya Case: தேசத்தையே உலுக்கிய 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்கு குற்றவாளிகள், வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடபட உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் உள்ள திகார் சிறையில், ‘டம்மி' வைத்து தூக்கிலிடும் சோதனை முன்னோட்டம் நடந்துள்ளது.
பவண் குப்தா, அக்ஷய், வினய் ஷர்மா மற்றும் முகேஷ் சிங் உள்ளிட்ட குற்றவாளிகள் வரும் ஜனவரி 22 ஆம் தேதி, காலை 7 மணிக்கு, திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். இது குறித்தான வழக்கில் டெல்லி நீதிமன்றம், இந்த மாதத் தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிப்புக்கான வாரன்டில் கையெழுத்திட்டது.
தூக்குத் தண்டனை சரியான முறையில் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில், 4 குற்றவாளிகளின் எடைக்கு ஏற்ப, சாக்கு மூட்டையில் கற்களைப் போட்டு தூக்கிலிடும் சோதனை செய்யப்படும். திகார் சிறையின், சிறை எண் 3-ல் இந்த ‘டம்மி சோதனை' செய்யப்பட்டது. இந்த சிறை எண் 3-ல்தான், கடந்த 2013 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, 4 குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட இருப்பது இதுவே முதன்முறை. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ‘ஹேங் மேன்' பவண் ஜல்லாத், 4 பேரையும் தூக்கிலிடும் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொள்வார் என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தூக்கிலிடப்பட உள்ள குற்றவாளிகளும் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்ய சிறை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நமக்குத் தகவல் வந்துள்ளது.
குற்றவாளிகளில் வினய் ஷர்மா மற்றும் முகேஷ், தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தூக்குத் தண்டனையைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பான இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்க உள்ளது.
(With inputs from PTI)