This Article is From Jan 07, 2020

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி அறிவிப்பு!!

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர். 

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி அறிவிப்பு!!

குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா

New Delhi:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 22-ம்தேதி காலை 7 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். 

குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேர் மரண தண்டனையை நிர்பயா வழக்கில் எதிர்கொள்ள உள்ளனர். 

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர். 

மருத்துவமனையில் படு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். 18 வயதுக்கு உட்பட்ட அவர், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளவுள்ளனர். 

இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருப்பது குறித்து பேட்டியளித்த அவர், 'நீதியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு வலுப்படுத்துகிறது. என் மகளுக்கு நீதி கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது. 

டிசம்பர் 12, 2012 அன்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பலத்த காயம் அடைந்திருந்த நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று உயிரிழந்தார். 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்திருந்தது. குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன. 

இதற்கிடையே குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 'சீராய்வு மனு என்பது கோரிக்கையை மீண்டும் கேட்பது என்று கரத முடியாது' என்று தெரிவித்தது. முன்னதாக 3 பேரின் சீராய்வு மனுவை காரணம் காட்டி 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, குற்றவாளி அக்சய் சிங் தொடர்ந்த மனுவை நிராகரித்தது. 

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளுக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது,'மனிதத்தன்மை அற்ற குற்றங்கள் உள்ளன. அவற்றில் இந்த பலாத்கார சம்பவமும் ஒன்று. அது நடந்த தினத்தன்று, அப்பாவி பெண்ணை காப்பாற்ற முடியாமலும், குற்றவாளிகளான இந்த 5 அரக்கர்களை படைத்ததற்காக வேண்டியும் கடவுள் வெட்கித் தலை குனிந்தார்' என்று கூறினார். 

குற்றவாளிகள் 4 பேரும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பாக அவர்களை தூக்கிலிடுவதற்கான தயாரிப்புகளை அதிகாரிகள் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.