பிப்.1ம் தேதி தூக்கு தண்டனை பெற உள்ள 4 நிர்பயா குற்றவாளிகளும் தங்களது கடைசி விருப்பத்தை தெரிக்காமல் மவுனம் காத்து வருவதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை பெற உள்ள குற்றவாளிகள், கடைசியாக தங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் யாரை சந்திக்க விரும்புகிறார்களோ அவர்களை சந்திக்கலாம், மேலும், அவர்களது சொத்துகளை வேறு யார் பெயருக்கு மாற்ற விரும்புகிறார்களோ அதனையும் செய்யலாம் இதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது.
ஆனால், குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் சிங், பவன் குப்தா ஆகிய 4 பேரும் மவுனம் காத்து வருகின்றனர். இது அவர்கள் மேலும் அவகாசம் வாங்குவதில் நம்பிக்கையுடன் இருப்பதை காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்களால், ஜன.22ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பிப்.1ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், மரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மரண தண்டனை குற்றவாளிகளுக்கு உள்ள உச்ச நீதிமன்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரக்கோரி மத்திய அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தற்போதுள்ள விதிகளின்படி மரண தண்டனை கைதிகள், ஒவ்வொரு முறையும் மேல் முறையீடு செய்து தண்டனை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். நிர்பயா வழக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கண்டித்துள்ளது.
முக்கிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தாலும், தங்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் விதிகளை பயன்படுத்தி குற்றவாளிகள் மேல்முறையீடு, கருணை மனுத்தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிப் போடப்படுகிறது.
இதனை தடுப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தால் அதனை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்வதற்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு கடந்த 9-ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நேற்றைய தினம் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டிய நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருந்தார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அந்த குற்றவாளிக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. இதன் அடிப்படையில் குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் கடந்த வாரம் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு பிப்ரவரி 1-ம்தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இதற்கிடையே, குற்றவாளி பவன் குப்தா என்பவர் குற்றம் நடந்தபோது தான் சிறார் என்று கூறி, தனக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.