நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளி பவன் குப்தா என்பவர் குற்றம் நடந்தபோது தான் சிறார் என்று கூறி, தனக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக இதே மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. ஒருமுறை அவர் சிறார் என்று ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனை மீண்டும் விசாரிக்க முடியாது. ' என்று தெரிவித்தது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'எத்தனைமுறை நாங்கள் ஒரே கோரிக்கையை திரும்பத் திரும்ப விசாரிப்பது?. மனுதாரர் இந்த விஷயத்தை பலமுறை நீதிமன்றத்தில் எழுப்பி விட்டார்' என்று தெரிவித்திருந்தது.
விசாரணையின்போது பவன் குப்தா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சிங் ஆஜரானார். குப்தாவின் பள்ளி சான்றிதழ்களின்படி, அவர் குற்றம் செய்திருந்தபோது சிறாராக இருந்தார் என்பது தெளிவாகிறது என வாதிட்டார்.
டெல்லி போலீஸ் சார்பாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாணைக்கு எடுத்துக் கொண்டால், அது நீதியை பரிகாசம் செய்வதற்கு ஒப்பாகும் என்று அவர் வாதிட்டார்.
குற்றவாளி பவன் குப்தா நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது அவருக்கு 19 வயது என்ற அரசு வழக்கறிஞர், அதற்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதே ஆவணம் கீழமை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
போலீஸ் தரப்பில், கடந்த டிசம்பர் 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, குற்றவாளி பவன் குமார் 18 வயதை கடந்திருந்தார் என்பது அவரது பெற்றோராலேயே உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றம் இழைத்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனவர். அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் 3 ஆண்டுகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பவன் குப்தா தான் குற்றம் நடந்தபோது சிறுவர் என்று கடந்த வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்தார். அன்றைக்குத்தான் குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1-ம்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2012 டிசம்பர் 16-ம்தேதி ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். பின்னர் அவரை அந்த கும்பல் கீழே தள்ளி விட்டது. 2 வாரகால சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிர்பயாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்த நிலையில், தற்போது குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.