GDP ஒன்றும் புனித நூல் அல்ல என்றும் அதனால் பொருளாதாரத்திற்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் பாஜக எம்.பி. கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டில் உற்பத்தியாகும் மொத்த பொருட்களின் அளவு Gross Domestic Product மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் GDP யால் அளவிடப்படுகிறது. இதனையே நாட்டின் பொருளதார வளர்ச்சி என்ற அளவுகோலால் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தி அளவு வெளியிடப்பட்டது. இதன்படி GDP பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு மத்திய பாஜக அரசு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் ஜி.டி.பி. குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மக்களவையில் இன்று எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியதாவது-
1934-ல் தான் GDP அளவீடே வந்தது. அதற்கு முன்பாக GDP என்ற ஒன்று இல்லவே இல்லை. அதனை பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புனித நூலாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. எதிர்காலத்திலும்கூட, நாட்டின் பொருளாதாரத்தை கணிப்பதில் GDP பயன்படாது. அதனை விட நாட்டு மக்களின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.
இவ்வாறு எம்.பி. நிஷிகாந்த் துபே கூறினார்.