Nithyananda News - சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தனது ‘கைலாசா' (Kailasa) என்னும் ‘தனி நாட்டிற்கு', அந்தஸ்து பெற அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி, நித்தியானந்தாவின் வழக்கறிஞர்கள், ஐக்கிய நாடுகள் சபையிடம் கைலாசா குறித்து அணுகி, சர்வதேச ஒப்புதலைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.
இந்துக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றும் அதனால் தனி நாடு அவசியம் என்றும் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
கடந்த சில வாரங்களாக பெண்களுக்கு பாலியல் தொல்லை, குழந்தைகளை துன்புறுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நித்தியானந்தாவை குஜராத் போலீஸ் தேடி வந்தது. இந்நிலையில்தான் திடீரென்று நித்தியனந்தாவின் ‘தனி நாடு' திட்டம் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இக்வடார் நாட்டுக்கு உட்பட்ட இடத்தில் தனித் தீவை நித்தியானந்தா தரப்பு வாங்கியுள்ளதாகவும், அதற்கு அவர் ‘கைலாசா' என்று பெயரிட்டுத் தனிக் கொடி, சட்ட சாசனம், முத்திரை உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து kailasa.org என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டு, தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அந்த தளத்தின்படி, சனாதனத்தை தர்மத்தை நிறுவுவதும், இந்து கலாசாரப்படி மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதும் அதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ‘கைலாசா' நாட்டில் குடியுரிமை வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லையாம். நித்தியானந்தாவின் சீடர்களாக இருத்தல், நாட்டின் அமைச்சரவை மற்றும் பிரதமரிடத்தில் அனுமதி பெறுதல் உள்ளிட்டவையை ஒருவர் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த தனி நாட்டின் குடிமகனாக உருவாக முடியுமாம்.
தனி பாஸ்போர்ட் உடன் வரும் கைலாசா நாடு, பிரத்யேக பணத்தையும் பெற்றிருக்குமாம். ஆங்கிலம், சமஸ்கிரதம் மற்றும் தமிழ் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திக்கு இடம் இல்லையாம்.