பீகாரிலுள்ள அரசுக் காப்பகத்தில் முப்பது சிறுமிகள் வன்புணரப்பட்ட சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இத்தனை நாள் மௌனம் காத்து வந்த நிதிஷ் குமார் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
"நடந்த சம்பவத்துக்காக வெட்கப்படுகிறேன். இது எங்களை அவமானத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது ஒரு பாவச்செயல். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இன்றி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் சிறுமிகளுக்கான அரசு நலத்திட்ட தொடக்கவிழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"குற்றவாளிகளை சும்மா விட மாட்டோம் என்றுதான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். இதுதொடர்பான சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடி சட்டமன்றத்தில் பேசினார்.
எதிர்க்கட்சியினர், குறிப்பாக ஆர்ஜேடி-யின் தேஜஸ்வி யாதவ் இவ்விவகாரத்தில் தொடர்ந்து நிதிஷ் குமாரை விமர்சித்து வருகின்றனர். "இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு தொடர்புடையவ்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்ற நிதிஷ் முயல்கிறார்" என்று தேஜஸ்வி யாதவ் கூறி இருந்தார்.
முசாபர்பூரில் அரசுக் காப்பகத்தில் உள்ள ஏழு வயதிலான ஒரு இளம் சிறுமி உள்பட பலரும் போதை மருந்து தரப்பட்டு வன்புணரப்பட்டுள்ளனர். மேலும் ஆடையின்றிப் படுக்கச் செய்தும் அவர்களை வெந்நீரில் முக்கியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் அரசியல் கட்சித் தொடர்புடைய காப்பக உரிமையாளர், பணியாளர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையின் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு தங்களுக்குள் ஒரு வலைப்பின்னலை அமைத்துக்கொண்டு சிறுமிகளைப் பல வகைகளில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதுபோன்ற மேலும் பல அமைப்புகளை நடத்தி வரும் பிரஜேஷ் தாக்கூர், கைது செய்யப்பட்டபோது கேமராவைப் பார்த்து சிரித்தபடி சமாளித்தார்.
இக்காப்பகத்துக்கு பீகாரின் சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவரும் சென்று வந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட அதிகாரி ஒருவரின் மனைவி, 'அமைச்சரின் கணவர் இக்காப்பகத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஆவார்' என்று தெரிவித்துள்ளார்.
தந்தை லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ஜேடி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அவரது மகன் தேஜஸ்வி யாதவ், "முசாபர்பூரில் நடந்த வன்புணர்வுகளுக்கு எதிராகவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்து வரும் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசை எதிர்த்தும் சனிக்கிழமை பெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும்" என டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைப்பு ஒன்று கடந்த ஆண்டே இந்தக் காப்பகம் பற்றிக் கடுமையாகச் சாடி ஓர் அறிக்கையினை அளித்ததாகவும்; ஆனால் மாவட்ட நிர்வாகமும் சமூக நலத்துறையும் இதன் மீது எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.