This Article is From Oct 23, 2018

“17 இடங்கள் அல்ல; பாஜகவுக்கு இணையாக சீட்டுகளை பெறுவோம்”- ஐக்கிய ஜனதா தளம்

மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக போட்டியிடும் இடங்களுக்கு இணையாக போட்டியிடுவோம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது

“17 இடங்கள் அல்ல; பாஜகவுக்கு இணையாக சீட்டுகளை பெறுவோம்”- ஐக்கிய ஜனதா தளம்

சுமார் 16 இடங்கள் நிதிஷ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Patna:

மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கு 16 சீட்டுகள் அளிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், பீகாரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு இணையான தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் அம்மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் சமமான இடங்களில் பீகாரில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

சீட்டு பேரம் தொடர்பாக நேற்று முக்கிய தகவல் ஒன்று வெளியானது. இதன்படி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோர் 4 வாரங்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், சீட்டு பேரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.

இதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து பாஜகவும், நிதிஷ் குமாரும் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகள் நிதிஷ் குமாருக்கு அளிக்கப்பட உள்ளது. அவரை தவிர்த்து ராம் விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு 5 சீட்டுகளும், உபேந்திர குஷ்வாஹா கட்சிக்கு 2 சீட்டுகளும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான தகவலை என்.டி.டி.வி.-க்கு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு முரண்பட்ட கருத்தை ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருக்கிறது. இதனால் சீட்டு பேரத்தில் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

.