This Article is From Jan 23, 2019

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடையில்லை: உயர்நீதிமன்றம்

தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை, எனவே ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதற்கான வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு வழக்கறிஞர், மேல்முறையீடு காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாகவும், இன்றைய தேதியில் குற்றவாளி இல்லை என்பதால் அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாகவும் வாதங்கள் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளித்த மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பபட்டது. அதில், மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என தெரிவித்தது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை, எனவே ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

.