மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா இருந்தபோது, ஊடக குழு அமைக்க அவருக்கு உதவியாக இருந்த காங்கிரஸ் செய்திதொடர்பாளர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பாகிஸ்தான பாலக்கோட்டில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எதிராக ஒரு கட்சி முடிவு எடுக்கும்போது, எனக்கு அந்த கட்சியை விட்டு வெளியில் வருவதை தவீர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் வளர்ச்சி குறித்த நரேந்திர மோடியின் வாக்குறுதிகளை தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக இருந்து வந்த வதக்கான், தேர்தல் அரசியலுக்காக செயல்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களாக காங்கிரஸ் ஊடக பிரிவில் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வதக்கான், பாஜகவின் சமூக ஊடக தந்திரத்தை எதிர்கொள்ளும் பொருட்டு ஊடக பிரிவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னால் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சிக்காக பிரதான ஆண்டுகளை கொடுத்தேன், ஆனால், குடும்ப அரசியல் மற்றும் பயன்படுத்திவிட்டு வீசும் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சுய மரியாதைக்குரியவர்களுக்கு இங்கு இடமில்லை என்று அவர் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
வதக்கான் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், பாஜக அவருக்கு ஒரு தொகுதியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.