சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, பொது மக்களை துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆக.21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வெட்டக் கூடாது என்றும் நிலங்களை கையகப்படுத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையில் மனுதாரர் ஒருவர், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எழுதப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதில் பொதுமக்களுக்கு உதவி செய்த நான்கு பேரை போலீஸார் கைது செய்ததாகவும், நிலம் வழங்க மறுப்பவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது, ஏற்கெனவே நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசும், அதிகாரிகளும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளோம் என நீதிபதிகள் மீண்டும் எச்சரித்தனர். தொடர்ந்து இந்த வழக்கை வரும் செப்.24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)