உத்தர பிரதேச, மீரட்டில், ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு இந்துப் பெண், முஸ்லீம் ஆணுடன் நட்பு வைத்திருந்ததை காரணம் காட்டி வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும், போலீஸும் இருவரையும் தாக்கியது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பெரும் சர்ச்சைக்கு உள்ளான இந்த விவகாரத்தில் இதுவரை கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 18 பேரும், 4 போலீஸாரும் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள். இதில் 3 போலீஸார், கோராக்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மீது இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை.
இது குறித்து பாதிக்கப்பட்ட முஸ்லீம் ஆண், ‘செப்டம்பர் 23 ஆம் தேதி, எனது தோழி என் வீட்டிற்கு ஒரு புத்தகம் வாங்குவதற்காக வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் என் பெயரைக் கேட்டனர். உடனே என்னை அவர்கள் தாக்க ஆரம்பித்தனர். ‘முதலில் இந்துப் பெண்ணுடன் நட்பாக பழக ஆரம்பித்து, காதலில் வீழ்த்தி, லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவாய்’ என்று கூறி, என்னை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.
நான் என் கல்லூரிக்கு போக விரும்பவில்லை. எனக்கு மிக அவமானமாக இருக்கிறது. தொடர்ந்து பலர் என்னை தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனது கல்லூரிக்கு வந்து என்னை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டுகின்றனர். இதுவரை போலீஸ், என் தரப்பு வாதத்தைக் கூட பதிவு செய்யவில்லை’ என்று நொந்து கொண்டார்.
அதேபோல, முஸ்லீம் நபருடன் புத்தகம் வாங்க சென்ற இந்துப் பெண்ணை, அங்கு வந்த போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரையும் பெண் போலீஸ் ஒருவர் வாகனத்துக்குள் தாக்கினார்.
மீரட் எஸ்.பி-யிடம் நாம் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, ‘தற்போது கிராந்தி யாத்ரா நிகழ்ச்சி குறித்தான பரபரப்பில் இருக்கிறோம். இந்த விஷயம் குறித்து பின்னர் நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், உத்தர பிரதேச டிஜிபி ஓ.பி.சிங், ‘மீரட் சம்பவம், சில மோசமான காவலர்களால் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கபடவில்லை.