This Article is From Oct 22, 2019

''பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை'' - அமைச்சர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

''பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை'' - அமைச்சர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

25-ம்தேதி பிகில் திரைப்படம் திரைக்கு வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மீறி திரையிட்டால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்திருக்கும் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு 25-ம்தேதி திரைக்கு வருகின்றன. 

இதையொட்டி பெரும்பான்மையான திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10.30 காட்சிகள் வரை தியேட்டர்களில் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்களும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகும் 25-ம்தேதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்பனையாகி வருகிறது.இந்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
 

.