இந்திய ராணுவத்தில் தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்கள் நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் தரைப்படை வீரர்கள் 80 பேர், விமானப்படையில் 16 பேர், கடற்படையில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தகவலை பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டில் தரைப்படை வீரர்கள் 75 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2016-ல் இந்த எண்ணிக்கை 104-ஆக இருந்தது.
விமானப்படையை பொறுத்தவரையில் 2017-ல் 21 பேரும், 2016-ல் 19 பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர். கடற்படையை பொறுத்தவரையில் 2017-ல் 5 பேரும், 2016-ல் 6 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பதிலில், '' வீரர்களுக்கு ஏற்ற குளிரை தாங்கும் ஆடைகள், உணவு, குடும்பத்தினருடன் தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதி, பிள்ளைகளுக்கு பள்ளி வசதி, குடும்ப நல கூட்டங்கள், யோகா வகுப்புகள், உடல்நல, மனநல ஆலோசனை உள்ளிட்டவை வீரர்களுக்கு செய்து தரப்படுகின்றன.'' என்று கூறியுள்ளார்.