This Article is From Jul 25, 2018

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!’- டெல்லிப் பயணத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் கருத்து

நேற்று ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!’- டெல்லிப் பயணத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் கருத்து
NEW DELHI:

நேற்று ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், அவரைச் சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டார். இதையடுத்து சென்னைக்கு வந்த ஓ.பி.எஸ், ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று அதிமுக எம்.பி மைத்ரேயன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிச் சென்றார் பன்னீர்செல்வம். 
 

இதையடுத்து அவர் ராணுவ அமைச்சர் அலுவலகத்துக்கு மைத்ரேயனுடன் சென்றுள்ளார். அங்கு மைத்ரேயனை மட்டும் பார்க்க அனுமதித்துள்ளார் அமைச்சர். பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், ‘இது அரசியல் ரீதியான பயணம் அல்ல. என் சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்காக, ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்’ என்று கூறினார். 

இதற்கு ராணுவ அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மைத்ரேயன் எம்.பி-க்கு மட்டும் தான் அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரை சந்திக்கவில்லை’ என்று பதிவிடப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற கருத்தை மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டார். நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வத்தை பார்க்க மறுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அதிமுக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. 
 

.