டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுப்பாட்டை குறைக்க ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த வாகன கட்டுப்பாட்ட முறையின் மூலம் தனியார் வாகன பயன்பாட்டை பாதியாக குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் சிறிது அதிகரித்தன் காரணமாக நகரத்தில் மாசு அளவு சற்று குறைந்தது. ஏனினும் காற்றின் தரம் இன்னும் கடுமையான பிரிவிலே இருந்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் இருந்து முதல்முறையாக மாசு அளவு அவசர நிலைக்கு சென்ற நிலையில், டெல்லியில் 'பொது அவசரநிலை' அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் டெல்லியில் காற்றில் மாசு அளவு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது. இதனால், சுவாசிப்பதே கடினமானது. மேலும், சாலை மற்றும் விமானப் போக்குவரத்தை பாதிக்கும் வகையில், புகைமூட்டம் அதிகரித்தது.
இந்த திட்டத்தின்படி நவம்பர் 4, 6, 8, 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவெண்கள் (1, 3, 5, 7, 9 ஆகிய எண்களில் முடியும் எண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. இதேபோல் நவம்பர் 5, 7, 9, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவெண்கள் (0, 2, 4, 6, 8 ஆகிய எண்களில் முடியும் பதிவெண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க முடியாது.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.4,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இது முந்தைய காலங்களில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு முறையின் போது விதித்த அபராத தொகையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரது வழக்கமான பணிக்கு செல்வதற்கு சக அமைச்சர்களுடன் காரை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சகோதரத்துவத்தை வளர்க்கும், உறவுமுறைகளை ஆரோக்கியமாக்கும், பெட்ரோலை சேமிக்க உதவும், மாசையைம் குறைக்கும் என்று தனது ட்வீட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மானிஷ் சிசோதியாவும் இன்று தனது பணிகளை மேற்கொள்ள மதிவண்டியிலே அலுவலகம் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் தினமும் 30 லட்சம் கார்கள் சாலையில் செல்கின்றன. அதில், இன்று 15 லட்சம் கார்கள் சாலையில் செல்லவில்லை. இதன் மூலம் இந்த 15 லட்சம் கார்களில் இருந்து வரும் காற்று மாசுகள் குறையும்.
இந்த விதிமுறைகளானது, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பொருந்தாது என்றும், மற்ற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைப்படி, இன்று காலை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது.
இருசக்கர வாகனம் மற்றும் எலட்ரிக் வாகனங்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், அவசர மருத்துவ பயன்பாட்டிற்கும், பள்ளி குழந்தைகளை சீருடையுடன் அழைத்துச்செல்பவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே ஒரு பெண் இயக்கி செல்லும் வாகனங்களுக்கும், 12 வயது கீழ் உள்ள சிறுவர்களை அழைத்து செல்பவர்களுக்கும், மற்றுத்திறனாளிகளை அழைத்துச்செல்பவர்களுக்கும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த புதிய வாகன விதிமுறைகளை காரணம் காட்டி, ஓலா மற்றும் உபேர் போன்ற கால்டாக்சி நிறுவனங்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
(With inputs from Agencies)