ஆம்புலன்ஸ் அளிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில் உறவினரின் சடலத்தை கம்பில் கட்டிக் கொண்டு ஒடிசாவில் பழங்குடி மக்கள் கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம் கலாண்டியில் நிகிடி மாஜி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டார்.
இதையடுத்து சடலத்தை கொண்டு செல்வதற்காக உறவினர்கள் வேன் கேட்டுள்ளனர். இதற்கு திங்கள் கிழமை யாருக்கும் வேன் அளிப்பதில்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.
இதையடுத்து கம்பு ஒன்றில் போர்வையை கட்டிக் கொண்டு அதில் வைத்து தோளில் சுமந்தவாறு சடலத்தை உறவினர்கள் கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் மகாபிரயாணயாமா திட்டத்தின் கீழ் சடலங்களை இலவசமாக கொண்டு செல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இந்த சலுகை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.