டடோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தில், சுற்றுலா பயணியின் வாகனத்தை பெண் புலி ஒன்று துரத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தங்களுடைய வாகனத்தை புலி துரத்தி வருவதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்திற்குள்ளான காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
வனத்துறை அதிகாரி ராகவேந்திரா மூன் கூறுகையில், இச்சம்பவம் ஞாயிறன்று சந்திராபூர் மாவட்டத்தின் அருகில் உள்ள புலிகள் சரணாலயத்தில் நிகழ்ந்துள்ளது.
மூன்றரை வயதான சோட்டி மது என்ற பெண் புலி, தனக்கு அருகில் பார்வையாளர்களின் கார் சென்றதும் கோபமடைந்து விட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வனப்பகுதியிலிருக்கும் சாலையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், வனவிலங்கு வாழ்விடத்திற்குள் நுழையும்போது விதிமுறைகளை பின்பற்றுமாறு சுற்றுலா பயணிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆறு புலிகள் சரணாலயம் உள்ளது. அவை, 9,116 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 165 புலிகள் வசிப்பதாகவும் இதனை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் மூலம் 11.76 கோடி வருவாய் 2017-18 ஈட்டப்பட்டதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.