Read in English
This Article is From Aug 03, 2018

‘நிரவ் மோடி உறவினர் சோக்சிக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட்டது?’- ஆன்டிகுவா விளக்கம்

நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாருமான மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகனாக சில மாதங்களுக்கு முன்னர் மாறினார்

Advertisement
இந்தியா

Highlights

  • கடந்த நவம்பர் மாதம் சோக்சிக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கியது
  • ரூ.13,500 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் சோக்சி தேடப்பட்டு வருகிறார்
  • ஜனவரி 15-ல் அவர் இந்தியாவில் இருந்து பறந்தார்

நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாருமான மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகனாக சில மாதங்களுக்கு முன்னர் மாறினார். இந்நிலையில், பல கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவர் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபராக இருந்து வருகிறார். வேறு நாட்டுக் குடியுரிமை வாங்கிவிட்டதால், அவரை ஆன்டிகுவாவிலிருந்து அழைத்து வருவதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சோக்சிக்கு ஏன் குடியுரிமை வழங்கினோம் என்பது குறித்து ஆன்டிகுவா அரசு விளக்கம் அளித்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,500 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சோக்சியும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டனர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் சோக்சி உள்ளிட்டவர்களின் பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கவிட்டது.

இது ஒருபுறமிருக்க சோக்சி, கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது ஆன்டிகுவா அரசு, இந்திய அரசிடம் சோக்சி குறித்து விசாரித்துள்ளது. அந்நேரத்தில் சோக்சி மீது எந்த வழக்கும் இல்லாததால், நவம்பர் மாதம் அவருக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கப்பட்டது. பின்னர், ஜனவரி 15 ஆம் தேதி அவர் ஆன்டிகுவாவின் குடிமகனாக ஆனார். ஜனவரி 29 ஆம் தேதி தான் பிஎன்பி-யில் செய்த பணமோசடி குறித்து தெரியவந்தது. இதனால், அவரை இந்திய அரசு, கைது செய்து அழைத்து வர முடியாத நிலை உருவாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசியுள்ள ஆன்டிகுவா அரசு, ‘இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு வந்த ஆவணங்களில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு வந்த ஆவணங்களிலும் சோக்சி மீது எந்த வழக்கும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அதனாலேயே அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளது.

Advertisement