ஏழைகளின் உயிர் நாடியை மத்திய அரசு பறிக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
109 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் 151 ரயில்களில் தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதனால் ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் வருவாய் கிடைக்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே சேவையை இந்தியாதான் வழங்கி வருகிறது. சுமார் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12 லட்சம் பேர் வரையில் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரயில்வேயில் தனியார் முதலீட்டை கொண்டுவரும் ரயில்வேயின் முயற்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'ஏழை மக்களின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. அதனை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். லடாக் எல்லையில் 20 ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு சீனாவிடம் சரண்டர் அடைந்து விட்டதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.